கொழும்பின் இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரது சடலம் திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மீட்கப்பட்டன. கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகடே சந்திக்கருகில் உள்ள ஜாடி வாவியிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
பிற்பகல் 5.20 மணியளவில் பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சுமார் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் இறுதியாக கறுப்பு நிற அறை காட் சட்டையும், கறுப்பு நிற மேற்சட்டையும் அணிந்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய தெஹிவளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் மேற்படி சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment