“சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றைத் தாய்நாட்டுக்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்காலையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்துக்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலைவணங்குவேன்” – என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை – தங்காலையில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டில் குடியேறியுள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலையை மதித்து, எனக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வியாழன் மாலை நான் வெளியேறினேன். இதற்கு முன்னர், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சிலர் ஊடகங்கள் முன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததை நான் கண்டேன்.
மக்களுக்கு எதையும் செய்ய இயலாமல் மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், அவர்கள் புதிய சட்டங்களை இயற்றிய பிறகு, 24 மணி நேரத்துக்குள் நான் விஜேராம இல்லத்துக்கு விடை கொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்துக்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலைவணங்குவேன்.
தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை இல்லாத அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக, அதன் விளைவாக எழுந்த பல சம்பவங்களின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நான் ஒருபோதும் வருந்தமாட்டேன். இந்தத் தாய்நாட்டில் சுதந்திரமாகச் சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன்.
சுவாசம் என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. இதில் இன, மத பேதங்கள் இல்லை. நம் சுவாசத்துக்காக தங்கள் சுவாசத்தை இழந்தவர்கள் இராணுவ வீரர்கள். அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும் நாம் அனைவரும் சேர்ந்து அநுராதபுரம் புனித நகரத்தில் சந்த ஹிரு சேயவை (சந்திரன் மற்றும் சூரியன் தாதுகோபுரம்) உருவாக்கினோம். சந்திரன், சூரியன் இருக்கும் வரை நமது தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை அது குறிக்கின்றது.
எனது மூத்த மகன் நாமல் கூறியது போலவே, எல்லாம் தொடங்கிய எனது கிராமத்துக்கு நான் திரும்ப வந்துள்ளேன். நாம் கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகவே நான் வந்தேன். இப்போது கிராமத்தில் புளிக்குழம்பில் உள்ள மீனை ருசித்து மகிழ என்னால் முடியும். கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எது எப்படி இருந்தாலும், எல்லாம் இந்த மண்ணிலிருந்துதான் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் போட்டியிட்டான்.
அதற்கான வாய்ப்பை சிறிமாவோ பண்டாரநாயக்க வழங்கினார். ஓர் இளம் அமைச்சராக நான் பயணிக்க வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவியாகவும், தாயாகவும் இருந்தார் என்றால் அது சரியானது. அரசியலில் சரியான வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்கவுக்குப் பின்னால், ரூஹுணுவின் மக்கள் பிரதிநிதியாக இருந்த எனது அன்புக்குரிய தந்தை எப்போதும் காணப்பட்டார். எனது தந்தை ரூஹுணுவின் பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினராக, 1970 ஆம் ஆண்டு மக்கள் அரசின் முதல் சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன்.
அங்கு பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் பேசியது எனக்கு நினைவிருக்கின்றது. இருண்ட காலங்களில் நிலவிய அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணாமல்போனவர்களுக்காக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல்போனவர்கள், மனித உரிமைகள் மீறல்களுக்காக சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரி ‘வழக்கறிஞர் மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் – மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்கல்லை’ என்பதை எனது சகோதரர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றேன்.
பாத யாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரச எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக் காட்டுகள். தங்கள் அரசியல் அழுத்தங்களையும், பதற்றங்களையும் தவிர்ப்பதற்காக யாரும் ஜனநாயகத்தில் இருந்து விலகிச் செல்ல முடியாது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்க முயற்சிப்பது வருத்தத்துக்குரியது.
மக்கள் எங்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளின் தீவிரம் காரணமாகவே கடந்த காலத்தில் சில சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மஹிந்த ராஜபக்ஷ தன் மனச்சாட்சிக்கு இணங்க நாட்டுக்காக முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது வேறு எதுவும் இல்லை. கடந்த காலத்தில் பெற்ற அதே மக்கள் அன்பை இன்றும் அதே போல் பெறுவது எனக்குக் கிடைத்த பாக்கியம். அந்தப் பாக்கியத்தை யாரிடமும் இழக்க முடியாது.
மதத் தலைவர்களிடம் இருந்து தினமும் நான் பெறும் ஆசீர்வாதம், பௌதீக வரப்பிரசாதங்களை விட மேலானது. எனது அன்பு மனைவி ஷிரந்தி, அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மனச் சுதந்திரத்தை அளித்து எனக்கு எப்போதும் பலமாக இருந்தார். அப்போதும், இப்போதும் என் அருகில் இருந்த மற்றும் இருக்கும் எனது பிரதான பாதுகாப்பு அதிகாரி உட்பட எனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு, பணியைத் தாண்டிய ஒரு பாசமான பிணைப்பாகும். மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்காலையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஓர் அறிக்கை வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரியவந்தது. தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைப்பது குறித்து நான் பதிலளிக்கவில்லை. ஆனால், நான் வாழும் வரை, நாம் அனைவரும் வாழும் அல்லது ஒருநாள் அடக்கம் செய்யப்படும் சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றைத் தாய்நாட்டுக்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று நான் அறிவிக்கின்றேன். அன்று தேவைப்பட்டால் எனக்குத் தோள் கொடுக்க இந்த நாட்டில் மகா சங்கத்தினரை உள்ளடக்கிய அன்பு மக்கள் இருக்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை.” – என்றுள்ளது.
Leave a comment