“கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசு முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
இதன்போது முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டின் சுயாதீன நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, எமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்கொள்வோம். குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நிரூபிப்போம்.
அச்சுறுத்தல் மூலம் எதிரணிகளை மௌனிக்க வைக்கலாம் என அரசு நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. அரசு தவறிழைத்தால் அதனைத் தொடர்ந்து துணிவுடன் சுட்டிக்காட்டுவோம்.” – என்றார்.
Leave a comment