திருகோணமலை – குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது.
திருகோணமலை – மூதூர் – கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்காக நீதியும் கோரப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் நினைவுகூரல் முன்னெடுக்கப்பட்டது.
1996.02.11ஆம் திகதி குமாரபுரம் கிராமத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் அப்பாவி பொதுமக்களை சுட்டும் வெட்டியும் கொன்றது. இதில், பெண்கள், சிறுவர்கள் என 26 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மூதூர் நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது, தெகிவத்தை படை முகாமிலிருந்த 8 இராணுவத்தினர் சாட்சியங்களால் அடையாளம் காட்டப்பட்டனர். அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. பின்னர் போர்ச் சூழலை காரணம் காட்டி அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஜூரிகள் சபை முன்பாக நடந்த வழக்கில் 2016 ஜூலை 27ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இறந்த இருவர் தவிர்ந்த 6 படையினரும் சகல குற்றங்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment