இலங்கையின் சுதந்திரநாள் தமிழருக்கு கரிநாள் என்று தெரிவித்து வடக்கு,
கிழக்கில் நேற்று போராட்டங்கள் பெரும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டபேரணிகளில் ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்தமயமாக்கப்படுதல்,
இந்தப் பகுதிகளில் தமிழரை சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தி கரிநாள் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
கிளிநொச்சியில்…
வடக்கில் பிரதான ஆர்ப்பாட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது. கந்தசுவாமி கோயிலின் முன்பாக ஆரம்பமான போராட்டக்காரர்கள் பசுமை பூங்கா வரை பேரணியாக சென்றனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரியும் தமிழ் இனப் பிரச்னைக்கான தீர்வு, தமிழர் தாயகப் பரப்பில் திட்ட மிட்ட முறையில் நடைபெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்த வேண்டும் என்று கேட்டும் கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன், அவை தொடர்பில் வலியுறுத்தும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். இதேபோன்று, தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் கொடூரங்களை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களுடனான பேரணியும் நகர்ந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இதேநேரம், போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
மட்டக்களப்பில்…
கிழக்கில் பிரதான போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. கல்லடி பாலத்தில் கூடிய போராட்டக்காரர்கள் தனியார் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. முன்னதாக காந்தி பூங்காவில் போராட்டத்தை நிறைவுறுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு பொலிஸார் தடை விதித்திருந்தனர்.
சுதந்திர தின கொண்டாட்டம் அங்கு நடைபெறுவதால் அங்கு போராட்டத்தை நிறைவு செய்வது வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் என்று பொலிஸார் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்தே போராட்டம் நிறைவுறும் இடம் மாற்றப்பட்டது. அத்துடன், பேரணி மட்டக்களப்பு நகரம் ஊடாக செல்லவும் பொலிஸார் அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு தள்ளுப்பாடுவரை சென்றிருந்தது.
இதைத் தொடர்ந்து போராட்டம் வெள்ளைப்பாலம் அருகே நிறைவு செய்யப்பட்டது. மட்டக்களப்பில் போராட்டத்துக்கு பெருமளவில் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினர் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, கரிநாள் போராட்டங்களுக்கு ஆதரவாக முல்லைத்தீவின் மல்லாவி நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதுதைவிர, வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.
Leave a comment