முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வருவதில் என்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதனை நியாயமான காரணங்களுடன் சத்திய கடதாசியாக சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கிலேயே நேற்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார்
வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாளன்று காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பில், ஆள்கொணர்வு மனுவை இருவரின் உறவினர்களும் கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இந்த மனுமீதான
விசாரணையில், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் 2012 செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின. இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்களின் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச்
செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் கோட்டாபய ராஜபக்ஷவை மன்றில் முற்பட்டு சாட்சியமளிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், ‘பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது’, என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்து வந்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் நடந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை ஊடாக முற்பட்டு சாட்சியம் அளிப்பதற்கு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.
இதனால், கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் அடுத்த வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Leave a comment