பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான அபாயம் காணப்படுகிறது.
எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உங்கள் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இன்று 09.12.2025 செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணியளவில், வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு நீர் கொண்டு வரும் வடி நிலங்களின் நீரேந்து பிரதேசங்களில் கன மழை கிடைத்து வருகின்றது. தொடர்ந்தும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
Leave a comment