வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
இந்தப் போராட்டம் யாழ். செம்மணிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்துக்கு நீதி கோரியும் இந்தப் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
Leave a comment