“ராஜபக்ஷக்களின் அரசியல் கதை இந்த நாட்டில் முடிந்துவிட்டது. அவர்களால் இங்கு மீண்டுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாது.” – இவ்வாறு அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
மீண்டும் மஹிந்த சூறாவளி என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விளக்கேற்றிய பின்னர் அவ்விளக்கின் வெளிச்சம் ஒரு கட்டத்தில் பிரகாசமாகத் தென்படும். அதாவது விளக்கு அணையப் போகின்றது என்பதே அதன் அர்த்தம். எனவே, அரசியல் ரீதியில் ராஜபக்ஷக்களின் கதை முடிந்துவிட்டது.
இலங்கையில் இனி அந்தப் பழைய கலாசாரத்துக்கு இடமில்லை. தற்போது சிறப்பாக இருக்கின்ற அரசியல் கலாசாரத்தைவிட சிறந்த ஒன்று வந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்.
அரசியல்வாதிகளின் சொத்து விவரம் இதுவரையில் வெளிவராமல்தான் இருந்தது. அவற்றைக்கூட வெளியிடுவதற்கு நாமே நடவடிக்கை எடுத்தோம். அரசியலில் ஈடுபடும் அனைவரும் கள்வர்கள் அல்லர்.
எவரேனும் முறையற்ற விதத்தில் சொத்து திரட்டி இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் தற்போது அனைவருக்கும் சமம் என்ற வகையில் அமுலாகி வருகின்றது.” – என்றார்.
Leave a comment