“தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே, கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. ஜனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர்,
மேலும் குறிப்பிடுகையில்,
“அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளில் எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம் அதிவிசேடமானதல்ல.
தென்னிந்தியாவில் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் கச்சதீவு குறித்து பேசுவது வழமையானதொரு விடயமாகும். அவர்கள் தமக்காக வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவு தொடர்பிலோ அல்லது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ வாக்குறுதிகளை வழங்குவர்.
எனவே, கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. கச்சதீவு எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். அதில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
அந்தவகையில் தென்னிந்தியாவில் கூறப்பட்ட கருத்துக்கும் ஜனாதிபதியின் கச்சதீவு விஜயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஜனாதிபதியால் செல்ல முடியும்.
அவ்வாறு செல்லும் போது மக்களுடன் கலந்துரையாடி, அந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்தினால் அது சிறந்ததாகும். நாம் அறிந்த வகையில் இதுவரையில் ஜனாதிபதி ஒருவர் கச்சதீவுக்குச் செல்லவில்லை. அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த விஜயம் மிக முக்கியத்துவம் மிக்கது.” – என்றார்.
Leave a comment