முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7 மணியளவில் ஓய்வுபெற்ற தபால் அதிபர் முருகேசு சண்முகம் தலைமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன் “தமிழுணர்வும் ஈழத்தமிழர் கல்வி உரிமையும்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இந்த நினைவஞ்சலி நிகழ்வில் வி.தர்மலிங்கத்தின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.விகே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம், 1985ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மானிப்பாயில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.










Leave a comment