அரியாலை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்ற புலனாய்வுப் பிரிவின் மனிதகொலை விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யாழ்.நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரை அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்றுப்பொருட்கள் வைக்கப்படவுள்ளன.
அரியாலை புதைகுழிகளில் இருந்து இதுவரை புத்தகப் பை , சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போச்சி, வளையல்கள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றினைப் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, அவற்றை அடையாளப்படுத்தக் கூடியவர்கள் நீதிமன்றுக்கோ, குற்றப் புலனாய்வுத் துறையினருக்கோ
தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை சான்றுப் பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment