யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊர்காவற்றுறை நீதிவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் இந்திய இழுவைப் படகையும், அதில் இருந்த 7 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர்.
பின்னர் மேற்படி மீனவர்களை இழுவைப் படகுடன் கடற்படையினர் காங்கேசன்துறைக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைத்தனர்.
7 இந்திய மீனவர்களையும் கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை ஜூலை 25ஆம் திகதி (நேற்று) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், மேற்படி மீனவர்களின் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment