போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்குக் கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று அந்நாட்டுத் தூதுவர் எரிக் வோல்ஸ், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கான கனடாத் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணிப் பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்குத் தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், தமிழ் மக்களும் முழு அளவில் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்பும் அரசின் திட்டங்களுக்குக் கனடாவும் உதவி நல்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்குக் கனடா தம்மால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று தூதுவர் பதிலளித்துள்ளார்.
“கடந்த அரசைப் போன்று இல்லாமல் இந்த ஆட்சியாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களே தற்போது இருக்கின்றார்கள். தற்போதைய ஜனாதிபதியும் சர்வ அதிகாரம் கொண்டவராக இல்லாமல் மக்களின் தலைவனாகச் செயற்படுகின்றார்.” – என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முதலீடுகள் செய்வதற்கான சூழல் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
வடக்கில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து கனடாவால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் வெற்றியளிக்க அரசின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள், தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இலங்கைக்கான கனடாத் தூதுவர் தமது சேவைக் காலம் முடிவடைந்து இந்த மாதத்துடன் தாயகம் திருப்பவுள்ளார். அவர் ஆற்றிய சேவைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Leave a comment