சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் எந்த தொடர்பும் இன்றி காணாமல் போயிருந்த இந்திய மீன்பிடி படகு தொடர்பில் இந்தியாவின் மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கொழும்புக்கு தகவல் வழங்கியுள்ளது.
இதனை அடுத்து விரைந்து செயற்பட்ட இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுக்க கப்பல் ஒன்று அனுப்பப்பட்டது.
இதன் விளைவாக, சிலாபம் அருகே கடலில் படகில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
மீனவர்கள் இந்தியாவின் மினிகாய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
நான்கு மீனவர்களும் திக்கோவிட்ட துறை முகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு கடற்படை மற்றும் கடலோர காவற்படை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆரம்ப வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து இந்திய மீனவர்களை இரண்டாவது முறையகாக இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.
Leave a comment