பிரபல அரசியல்வாதிகள் இருவர், இரண்டு நாள்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன எனப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த அரசில் அமைச்சர்களாக இருந்து அதிர்ச்சியான நடவடிக்கைளில் ஈடுபட்ட இருவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும், இலஞ்சம் ஊழல் பற்றி இவ்விருவருக்கும் எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கிரிந்த மீன்வளத் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் கொரிய நிறுவனத்துக்கு வழங்கியமை மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மீன்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன, அது தொடர்பான விசாரணைக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராக முடியாது என்று நேற்று இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு, முன்னாள் அமைச்சரை நேற்றுக் காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைத்திருந்தது.
இருப்பினும், இலஞ்ச ஒழிப்பு ஆணைய வட்டாரங்களின்படி, சேனாரத்னவின் வழக்கறிஞர் நேற்றுமுன்தினம் காலை அவர் சார்பாக ஆஜராகி, தனது கட்சிக்காரர் மருத்துவ நிலை காரணமாக ஆஜராக முடியவில்லை என்று கூறி ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜித சேனாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி கோரி இலஞ்ச ஒழிப்பு ஆணையம் முன்னதாக கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவிடம் சாட்சியங்களைச் சமர்ப்பித்திருந்தது.
Leave a comment