இலங்கையின் பாதாள உலகக் குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“இந்தக் குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” – என்றார்.
இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலகக் குற்றங்களை ஒழிக்கப் பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Leave a comment