இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருக்கும் நிலையில், அவர் விசாரணை செயன்முறைகளில் அவர் உள்வாங்கப்படுவாரா என வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையாளர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசாங்கத்தின் சார்பில் அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்து அவசியமான தகவல்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவரைத்தொடர்ந்து கருத்துரைத்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அண்மையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலையில் சென்று சந்தித்தாகவும், அவசியமான தகவல்கள்பெறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமானது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அவ்வலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னக்கோன், ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து நிகழ்நிலை முறைமையில் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தின்போது வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவில் அங்கம்வகிக்கும் அறிக்கையாளர் ஒருவரால்,இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். விசாரணை செயன்முறைகளில் அவர் உள்வாங்கப்படுவாரா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா அதிகாரியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளித்த பொலிஸ் திணைக்கள அதிகாரி, சோமரத்ன ராஜபக்ஷவின் வெளிப்படுத்தல்கள் இலங்கையின் குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் சுயாதீனத்துவம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநிலைமை என்பவற்றுக்கான நிரூபணமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் சோமரத்ன ராஜபக்ஷவினால் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முதன்முதலாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கமளித்த அவர், அதனையடுத்து செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் ஊடாக 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 4 உடல்கள் யாருடையவை என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கருத்துரைத்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அண்மையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலையில் சென்று சந்தித்தாகவும், அவசியமான தகவல்கள் பெறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Leave a comment