“போர்க் காலத்தில் பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திரச் சமரில் ஈடுபட்ட தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ. எனவே, இராஜதந்திரம் என்றால் என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர, மஹிந்தவிடம் கேட்டு, கற்றுக்கொள்ள வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது :-
“போர்க் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ பல இராஜதந்திரப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். அப்படியான பிரச்சினைகள் தற்போது வருமானால் இந்த அரசு நடுங்கிவிடும்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மஹிந்த எடுத்த முடிவால் உலகில் பலம் பொருந்திய நாடுகள் ஓரணியில் திரண்டன. இந்நிலையில் அவற்றைக் கையாள்வதற்கு மஹிந்த கையாண்ட இராஜதந்திர, அரசியல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்தான் மஹிந்த இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார்.
எனவே, நேரம் கிடைக்கும் பட்சத்தில், மஹிந்தவைச் சந்தித்து இராஜதந்திரம் மற்றும் அரசியல் தொடர்பில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தற்போதைய ஜனாதிபதி அநுரவுக்குக் கூறுகின்றோம்.” – என்றார்.
Leave a comment