இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கி தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மீது நடத்திய போது உலகத்தில் எவரும் எங்களுக்காக பேசவில்லை. யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்போது வளைகுடாவில் நடக்கும் யுத்தம் மனிதாபிமானத்துக்கு எதிரானது என்றால் ஏன் இந்த நாட்டில் நடந்த இழப்புகளுக்கு நீதி வழங்கப்படவில்லை. ஏன் பொறுப்புக்கூறப்படவில்லை. தமிழினத்துக்கு நீதியை வழங்க இந்த அரசாங்கமும் தயங்குகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்தியக் கிழக்கு நாடுகளில் யுத்தம் நடைபெறுகின்றது. அங்கு ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் யுத்தம் புரிகின்றன. ஈரான் பல அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதேபோன்றுதான் 2009 இறுதியில் முள்ளிவாய்க்காலில் மனிதாபிமானத்துக்கான போர் என்ற பெயரில் கிட்டதட்ட ஒரு இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்,காணாமலாக்கப்பட்டனர்.இதனை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மறைந்த பேராயர் இராயப்பு ஜோசப் கூறியிருந்தார். மட்டக்களப்பு வாகரையில் கிட்டதட்ட 20ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை.
மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் இங்கு யுத்தத்தை நடத்தி விமானத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கி தாக்குதல்களை நடத்திய போது உலகத்தில் எவரும் எங்களுக்காக பேசவில்லை. எங்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்போது மனிதாபிமான யுத்தம் என்று உலகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தலைவராக அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்துகின்றது என்றால் அமெரிக்காவின் இந்த யுத்தம் நியாமானதுதானே. ஏன் இதனை பிழையாக பார்க்கின்றீர்கள்?இந்த போர் மனிதாபிமானத்திற்கு எதிரானதென்றால் ஏன் இந்த நாட்டில் நடந்த இழப்புகளுக்கு நீதி வழங்கப்படவில்லை. ஏன் பொறுப்புக்கூறப்படவில்லை?
தற்போதைய அரசாங்கம் அவ்வாறான இனப்படுகொலைகளில் ஈடுபடவில்லை. வெளியக பொறிமுறையில் விசாரிக்க முடியாது என்று தீர்மானம் எடுத்துள்ளது. அப்படியென்றால் இங்கே நீதி,நியாயம்,நல்லிணக்கம் என்ன? தனக்கு வந்தால்தான் தலைவலியின் அருமை தெரியும் என்பார்கள்.
இந்த நாட்டில் நடந்த யுத்தம், இந்த மக்கள் மீது புரியப்பட்ட இரத்தக்கறைகள் இன்னும் கழுவப்படவில்லை. மக்கள் இன்னும் தெருக்களில் போராடுகின்றனர். பல இடங்களில் யுத்தம் புரிவதற்கு இந்த அரசாங்கம் ஜே.வி.பியாக இருந்த போது பூரண ஆதரவை வழங்கியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி இராணுவத்திற்கு 40000 பேரை இணைத்தார்.
இந்த அரசாங்கமும் நீதியை வழங்க தயக்கம் காட்டுகின்றீர்கள். அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டை வன்முறைக்குள் வைத்திருக்க விரும்புவதையே இந்த அவசரகால சட்டமும் உறுதிப்படுத்துகின்றது. இன்னும் இளைஞர்களின் இருப்புகள் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. அடிக்கடி விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றனர். அவர்களின் முகப்புத்தக பக்கங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. நீங்கள் இவ்வாறான சட்டத்தின் மூலம் மக்கள் மீது கொடூரத்தை புரிகின்றீர்கள். இந்த நாட்டில் நடந்த அவலங்களுக்கு பதில் வழங்குங்கள் அப்போது நீதி கிடைக்கும் என்றார்.
Leave a comment