ஆளணி வெற்றிடங்களை நிரப்பக் கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர்
நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்னைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்னைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 நிலவும் நிலையில் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழக சுற்று நிருபத்துக்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தின் ஊடாக நியமனம் செய்யப்படுவது
தவறு எனவும் சுட்டிக் காட்டி போராட்டம் நடை பெற்றது.
ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் பல்கலைக்கழக பேரவைக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டமையால் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று
போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படவேண்டும். இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் எம். பி., செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டக்காரர்களுடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ரஜீவன் கலந்துரையாடினார்.
Leave a comment