‘தேசிய மக்கள் சக்தி வடக்கிலும் ஆழமாக காலூன்றும். வெளியில் இருந்து தலைவர்களை ஏற்றுமதி செய்யமாட்டோம். வடக்கு மண்ணில் இருந்தே சிறந்த தலைவர்களை உருவாக்குவோம். மலையகத்திலும் தேசிய மக்கள் சக்தியே பிரதான கட்சி.’-என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அரச ஊடகம் ஒன்றுக்கு (அ) வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-நாம் தெற்கில் பல வருடங்கள் அரசியலில் ஈடுபட்டோம். வடக்கில் அவ்வாறு செய்யவில்லை. 2010 ஆம் ஆண்டில் இருந்துதான் வடக்கில் செயற்பட ஆரம்பித்தோம்.
எனினும், ராஜபக்ஷ ஆட்சியில் அதற்குரிய சுதந்திரம் இருக்கவில்லை. எமது லலித், குகன்
சகோதரர்கள் கடத்தப்பட்டனர்.
தோழர் சுனில் ஹந்துனெத்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது இப்படியான சூழ்நிலையே அன்று இருந்தது.’ எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 2015 இல் இருந்து தீவிரமாக செயற்பட ஆரம்பித்தோம்.
ஜனாதிபதி தேர்தலைவிடவும் பொதுத்தேர்தலில் எமக்கு வடக்கில் பேராதரவு கிடைக்கப் பெற்றது.
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலிலும் எமக்கு ஆதரவு கிடைக்கப் பெற்றது. தமிழ்க் கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் சில தரப்புகள் தமிழ் ராஜபக்ஷக்களாக செயற்பட்டு, இனவாதம் பரப்பின.
காணிவிவகாரத்தையும் கையில் எடுத்தன. எனவே, உள்ளூட்சிசபைத் தேர்தலில் எமக்கு வடக்கில் பின்னடைவு ஏற்பட்டதாக நாம் கருதவில்லை.
யாழ்.மாவட்டத்தில் மாத்திரம் 81 உறுப்பினர்கள் உள்ளூட்சி மன்றங்களில் உள்ளனர்.’-எனவும் அவர் கூறினார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகத்திலும் தேசிய மக்கள் சக்தியே பிரதான கட்சியாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment