வவுனியா மாநகர சபையால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையங்கள் அகற்றப்பட்ட போது அந்தப் பகுதியில் வீதியோர வியாபாரிகளுக்கும் மாநகர சபையினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த வீதியோர கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை வவுனியா மாநகர சபையால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் இருந்து வேறு மாற்று இடத்துக்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஏற்கனவே மாநகர சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய அகற்றப்படாத வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கையை மாநகர சபை இன்று முன்னெடுத்தது. இதன்போது வீதியோர வர்த்தக நிலைய உரிமையாளர்களால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் வர்த்தகர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவ்விடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், வீதியோரமாக இருந்த வர்த்தக நிலையங்களும் முழுமையாக அகற்றப்பட்டன. பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.






Leave a comment