கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தீர்மானத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெறும் பனிப்போரால் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனரென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாதுகாப்பு படைவீரர்களின் அறிவை வளர்த்துக்கொள்வதற்கான கல்வி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1988இல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன இந்த கல்வி நிலையத்தை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினருடன் சிவில் பிரஜைகளின் மாணவர்களும் கட்டணம் செலுத்தி இதில் இணைந்து பட்டப்படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் 2017இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பித்தார்.
அதன் பிரகாரம் அங்கு நூற்றுக்கணக்கான தேசிய மாணவர்கள் மருத்துவ பீடத்தில் கற்றுவரும் நிலையில், இந்த வருடத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த மே மாதம் 21ஆம் திகதி பல்கலைக்கழக மருத்துவ பீட இணைத்தளத்தில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
ஆனால் மறுநாள் 22ஆம் திகதி பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர, இதன் பின்னர் இந்த பல்கலைக்கழகத்துக்கு பாதுகாப்பு படையினர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் இவ்வாறு திடீரென வெளியிட்ட அறிவிப்பால், பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க காத்திருந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.இவர்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பணம் செலுத்தி கல்வி கற்பதற்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடம் ஆரம்பித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
அதன் காரணமாக செய்டம் பல்கலைக்கழகம் நிறுத்தப்பட்டது. அதேபோன்று 2002இல் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தை எமது நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
தற்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர்களை இணைத்துக்கொள்வதை நிறுத்த எடுத்த நடவடிக்கை மூலம் அவர்கள் மீண்டும் தங்களின் பழைய கொள்கையை ஆரம்பித்துள்ளார்கள்.
பிரதமர் இந்த விடயத்தில் உறுதியாக இருந்து, இந்த பல்கலைக்கழகம் படையினருக்கு மாத்திரம் உயர் கல்வியை கற்றுக்கொள்ளும் இடமாற்ற மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தபோதும் இறுதியில் ஜனாபதி தலையிட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறது.
என்றாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடை இதுதொடர்பில் இடம்பெற்றுவரும் பனிப்போர் காரணமாக மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் இவ்வாறான தீர்மானம் எடுக்கும்போது அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டில் இருந்து தீ்ர்மானம் எடுத்து நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் பிரதமர் எடுத்த ஒரு தீர்மானத்தை ஜனாதிபதி மாற்றி இருக்கிறார். அதனால் அமைச்சரவையில் இவர்களின் கூட்டு பொறுப்பு மீறப்பட்டிருப்பதாகவே காண்கிறோம்
எனவே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி என இரண்டாக பிரிந்து தீர்மானங்களை எடுக்கும்போது அது நாட்டுக்கே பாதிப்பாக அமைகிறது. அவர்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடு நாட்டுக்கு பாதிப்பாக அமையக்கூடாது என்றே நாங்கள் தெரிவிக்கிறோம் என்றார்.
Leave a comment