யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருள்களைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய பரல் ஒன்று குண்டு செயலிழக்கும் பிரவினரால் மீட்கப்பட்டுள்ளது. அது ஏ.கே. அல்லது எல்.எம்.ஜி.ரக இயந்திரத் துப்பாக்கிக்குப் பய்ன்படுத்தப்படும் ட்ரம் மகஸின் (ரவைக் கூடு) எனச் சம்பந்தப்பட்ட தரப்புகளால் அடையாளம் காணப்பட்டது என அறியவந்தது.
ஆயினும் அந்த ட்ரம் மகஸினுக்குள் ரவைகள் நிரப்பப்பட்டிருந்தனவா அல்லது அது வெற்று மகஸினா என்பது தெரியவரவில்லை.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாளான நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலையில் புதைகுழியில் இருந்து சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அதிகாலை குண்டு செயலிழக்கும் பிரிவினர் வருகை தந்து அந்தச் சந்தேகத்துக்கிடமான பொருளை அகழ்ந்தெடுத்தனர். பின்னர் அது நீதிமன்றக் கட்டுக்காவலில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
ஆய்வின் பிற்பாடு அது தொடர்பான தகவல்கள் உறுதிப்பாடாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment