வவுனியா, சமயபுரம் பகுதியில் தனது மனைவியையும், மனைவியின் தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு இரவு வருகை தந்த உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்தக் குற்றச் செயலைப் புரிந்துள்ள சந்தேகநபரான குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தரும், படுகாயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளைச் சேந்தவர்கள் எனக் கிராம மக்கள் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் இருவரும் கணவன், மனைவியாகக் கடந்த ஒரு வருட காலமாக சமயபுரம் பகுதியில் வசித்து வந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் வசந்தி (வயது30), அவரது தாயாரான இந்திரா (வயது 69) என்ற இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகுமார் (வயது 45) என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment