“மஹிந்த ராஜபக்ஷவால்தான் வடக்கு மாகாணம் எல்லா வழிகளிலும் முன்னேறியது. பிரிவினைவாத சிந்தனையுடைய ஒரு சிலரே மஹிந்தவின் வெளியேற்றத்தைக் கொண்டாடுகின்றனர்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
‘மஹிந்த ராஜபக்ஷ விஜேராம அரச மாளிகையில் இருந்து வெளியேறியது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரின் சமூக வலைத்தளப் பதிவுகள் அமைந்திருந்தன. இது பற்றி உங்களின் கருத்து என்ன?’ என்று சஞ்சீவ எதிரிமான்னவிடம் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த சஞ்சீவ எதிரிமான்ன,
“வடக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நிலைப்பாடு அல்ல இது. போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை தொடர்பில் சிலர் மாறுபட்ட கருத்துடன் இருக்கலாம். ஆனால், வடக்கு மக்களால் கோரப்பட்ட அமைதியான அரசியல் சூழ்நிலையை மஹிந்த ராஜபக்ஷவே ஏற்படுத்திக்கொடுத்தார். இதனை வடக்கு மறக்கவில்லை.
அத்துடன், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், தோல்வி எனத் தெரிந்தும் தேர்தல் நடத்தப்பட்டது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசு பக்கம் வந்த 3 இலட்சம் பேர் பாதுக்காக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன, காணிகள் விடுவிக்கப்பட்டன. வீடுகள் அமைக்கப்பட்டு மீள்குடியேற்றமும் செய்யப்பட்டது. சரணடைந்த 11 ஆயிரத்து 900 முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டன.
மஹிந்த அரசால்தான் வடக்கு முன்னேற்றம் கண்டது. இது வடக்கில் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியும். எனினும், பிரிவினைவாத சிந்தனையில் உள்ள சிலர் இருக்கலாம். அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்திலேயே இந்த அரசு செயற்படுகின்றது.” – என்றார்.
Leave a comment