முன் பிணையில் விடுவிக்க மறுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சீராய்வு செய்து தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 30ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
முன் பிணையை நிராகரித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றத் தீர்ப்பின் நகல் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இந்த மனு தொடர்பாக உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன்படி, குறித்த முன் பிணை மறுப்பு தீர்ப்பின் நகலைச் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Leave a comment