முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காகக் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது.
அவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமையால் அறுவைச் சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்குச் செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்திருப்புப் பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும்.
எனவே, அவர் தனது சொந்தச் செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும்.
தற்போது, அவருக்குக் கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது.
அந்த நிலை படிப்படியாகச் சரி செய்யப்பட்டு வருகின்றது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” – என்றார்.
Leave a comment