யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ். பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று பொன்னகவைப் பெருவிழா காண்கின்றது.
இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணம் வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கின்றது.
ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை இன்று 6 ஆம் திகதி வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றது
இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்தகுமார ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.
பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்னகவை வரலாறு” எனும் நூலும், பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவுகூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும இந்த நிகழ்வில் சிறப்பாக நடைபெற்றது.

















Leave a comment