யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சையியல் துறை மற்றும் உடற்கூற்றியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரையும், கலைப்பீடத்தின் புவியியல் துறை, இந்து கற்கைகள் பீடத்தின் சமஸ்கிருதத்துறை மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞான அலகைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கே பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் செப்டெம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன், பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சத்திர சிகிச்சையியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி, சிரேஷ்ட விரிவுரையாளரும் சத்திர சிகிச்சை நிபுணருமான சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா, உடற்கூற்றியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி துரைரட்ணம் செந்தூரன், புவியியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா, சமஸ்கிருதத்துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா மற்றும் விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவநேசன் சபா ஆனந் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், விவசாய பீடத்தைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன் விவசாய உயிரியலில் சிரேஷ்ட பேராசியரகவும், மருத்துவ பீடத்தைச் சேர்நத சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி சிறுநீரகவியலில் பேராசிரியராகவும், சத்திர சிகிச்சை நிபுணர் சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா சத்திர சிகிச்சையியலில் பேராசிரியராகவும், உடற்கூற்றியல் துறைத் தலைவர் கலாநிதி துரைரட்ணம் செந்தூரன் உடற்கூற்றியலில் பேராசிரியராகவும், புவியியல் துறைத் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா புவியியலில் பேராசிரியராகவும், சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா சமஸ்கிருதத்தில் பேராசிரியராகவும், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சிவநேசன் சபா ஆனந் உடற்கல்வியியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
Leave a comment