கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2009 ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார்கள் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 7 ஏக்கர் காணிகள் இம்மாதம் 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சிப் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
Leave a comment