மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுரப் பாகங்களுடன் காணப்பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது.
அந்தக் காற்றாலை மின் கோபுரங்களுக்கான பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார் – தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் – பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் மற்றும் மன்னார் நகருக்குள் கொண்டு வரப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களைக் கொண்டு வர வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தநிலையில் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 5 இற்கும் மேற்பட்ட காற்றாலை மின் கோரங்களுக்கான காற்றாலைகளை மன்னார் நகருக்குள் எடுத்து வர வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் – தள்ளாடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் கண்காணிப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
அந்தப் பகுதியில் நின்ற மக்கள் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரங்களை ஏற்றிய வாகனம் மன்னாரை நோக்கிச் சென்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்ற நிலையில் சிறிய அளவிலான மக்களே அந்தப் பகுதியில் நின்ற நிலையில் பொலிஸார் அவ்விடத்தில் நின்றவர்களை அச்சுறுத்தியதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மன்னாரை நோக்கி அந்த வாகனம் சென்றது.


Leave a comment