“பாதாள உலகக் குழுவின் தலைவர்கள் ஐவர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமை சாதாரண விடயம் அல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்குத் தெரியும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“பாதாள உலகக் குழுவின் தலைவர்கள் ஐவர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையைச் சாதாரணமாகக் கருத வேண்டாம். எமது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இரு நாட்டு பொலிஸார், சர்வதேச பொலிஸ், இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்பினரின் அர்ப்பணிப்பான சேவைக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐவரையும் நாட்டுக்கு அழைத்து வருவது என்பது சாதாரண விடயம் அல்ல. இதனை விடப் பாரிய குற்றங்கள் தொடர்பில் அறிந்திருப்பதால் நாமல் ராஜபக்ஷவுக்கு இது சாதாரண விடயமாக இருக்கலாம். எனவே, இது அவர்களுக்குச் சிறிய விடயமாக இருந்தாலும் நாட்டுக்குப் பெரிய விடயமாகும். அடுத்த கட்ட விசாரணைகளில் வெளியாகவிருக்கும் தகவல்களில் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்படப் பலரது தகவல்களும் வெளியாகும்.
படிப்படியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கமைய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும், பொலிஸாரும் மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவர்.
மக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளைச் சிறிதாக எண்ண வேண்டாம் என்றும், சற்று முற்போக்காகச் சிந்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். அண்மையில் ஊடக அடையாள அட்டையைப் பயன்படுத்தி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, சிலரது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் நாமல் எதற்காக இந்தளவுக்குக் கலவரமடைந்தார் என்பது எமக்குத் தெரியும்.
குற்றங்களுடன் தொடர்பற்ற எவரும் வீணாகக் கலவரமடையத் தேவையில்லை. மாறாக வேறு தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றைப் பொலிஸாருக்கு வழங்குவது சிறந்ததாகும். இங்கு எந்தவொரு பிரசாரமும் முன்னெடுக்கப்படவில்லை. பொலிஸாரைக் கௌரவிப்பதற்காவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.” – என்றார்.
Leave a comment