வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் 22ஆம் நாளான திருவிழாவான மாம்பழத் திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) இன்று சிறப்பாக நடைபெற்றது.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து பிள்ளையாரும் முருகப் பெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.
இந்த மாம்பழத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அத்தோடு முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார்.
இதேவேளை, புராணக் கதையை மையமாகக் கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்தத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய ஒரு சமயம் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார்.
அதனை யாருக்குக் கொடுப்பது எனத் தீர்மானிக்க, முதலில் உலகைச் சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தைத் தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர்.
உடனே முருகப் பெருமான் மயில் மீதேறி உலகைச் சுற்றிவரச் சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து நீங்களே என் உலகம் எனக் கூறி மாம்பழத்தைப் பெற்றுக்கொண்டார்.
உலகைச் சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை, உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார். இந்தப் புராணக் கதையை மையமாக வைத்தே இந்தத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.





Leave a comment