ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாகத் தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். மேற்படி நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை அவர், தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார்.
அவ்வேளை, ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவரின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அந்த இளைஞரை வம்புக்கு இழுத்துத் தர்க்கம் புரிந்து, மண்வெட்டிப் பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரை அயலவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர் எனவும், அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்குச் செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
Leave a comment