2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான முதல் ஆறு மாதங்களில் 1,256 கோர விபத்துகளில் 1,332 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான பேருந்து விபத்தாக, 2005 ஏப்ரல் 27 ஆம் திகதி குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள யாங்கல்மோதர தொடருந்து கடவையில் நிகழ்ந்த விபத்து கருதப்படுகிறது.
கல்கிரியாகமவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, வலகும்புர மற்றும் பொல்கஹவெல தொடருந்து நிலையங்களுக்கு அருகே தொடருந்து பாதையில் கவனக்குறைவாக நுழைந்தது.
இதன் போது கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிச் பயணித்த கடுகதி தொடருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்குப் பின்னரும் இலங்கையில் பல பேருந்து விபத்துகள் நிகழ்ந்தாலும், அவை யாங்கல்மோதர விபத்தின் தீவிரத்தை எட்டவில்லை.
இந்த நிலையில், பேருந்து விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாரதிகளின் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் என பொலிஸால தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டில் வீதி விபத்துகளால் 2,341 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் இது 2,521 ஆக உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,256 கோர விபத்துகளில் 1, 332 பேர் உயிரிழந்தனர்.
இதில், தனியார் பேருந்து விபத்துகளில் 60 பேரும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்துகளில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.
2025 மே 11 ஆம் திகதி ரம்பொட- கெரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் காயமடைந்தனர்.
இது இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் பதிவாகிய, மிகவும் துயரமான பேருந்து விபத்தாகப் பதிவாகியது.
இந்தநிலையில், நேற்றிரவு எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் 24 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற மற்றொரு பேருந்து விபத்தில், இரண்டு சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விபத்துகளில் பேருந்து சாரதிகளின் கவனக்குறைவே முதன்மைக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில், பேருந்துகளின் இயந்திரக் குறைபாடுகளும் விபத்துகளுக்கு வழிவகுப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a comment