யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதனை மறுதலிக்கவில்லை. காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.காணாமல் போனோர் பற்றியவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள். இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வுபூர்வமானது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விசாரணைக்குழு தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறைமைகள் குறித்து விளக்கமளிக்கும் இரண்டாவது தொகுதி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி நேற்று முன்தினம் இராஜகிரியவில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணைகளின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது விசாரணைக் குழுக்களின் பங்கு காணாமல் போனோர் அலுவலகத்தால் வழங்கப்படும் நிறுவன ஆதரவு விசாரணை செயல்பாட்டில் உள்ள படிநிலைகள் விசாரணை நடைமுறைகள் மற்றும் ஆரம்ப விசாரணை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள்இ ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர்,
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பிரதான அலுவலகங்களாக காணப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணாமல் போனோர் பற்றி தொடர்ச்சியாக பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் உன்னிப்பாக அவதானம் செலுத்தின.இருப்பினும் முறையான நடவடிகைகள் தேசிய மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவில்லை.
காணாமல் போனோர் பற்றி விவகாரம் தனித்துவமானது. இதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக கிடைக்கப்பெற வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவ்விரு ஒத்துழைப்புக்களும் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதுமானதாக கிடைக்கப்பெறவில்லை,
காணாமல் போனோர் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தோம். காணாமல் போனோர் விவகாரம் வடக்கு,கிழக்கு, தெற்கு என சகல மாகாணங்களுக்கும் விரிவாக்கப்பட்டதொரு பிரச்சினையாகவே காணப்படுகிறது.
எவருக்கும் நாங்கள் எவ்விடத்திலும் சிறப்பு சலுகை வழங்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவும், நீதியை நிலைநாட்டவும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுகிறோம். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.
நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது. இதனால் தான் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது.அதன் தாக்கங்களும் இன்றளவில் தொடர்கின்றன. யுத்தம் அல்லது வேறேதும் காரணிகளால் ஒரு குடும்பத்தின் உறுப்பினர் காணாமலாக்கப்பட்டால் அந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கி அவர்களை திருப்திப்படுத்த முடியாது.
காணாமல் போனோரின் உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் செல்கையில் எம்மால் இதனை உணர முடிகிறது. அவர்களுடன் உரையாடும் போது ‘எமது உறவுகளுக்கு என்னவாயிற்று, எப்போது வருவார்கள்’ என்று தான் கேட்கிறார்கள்.
கடந்த கால அரசியல் காரணிகளால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது நம்பிக்கையின்மை காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையும் மாற்றமடைந்துள்ளது.தற்போது கட்டம் கட்டமாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன.
வலிந்து காணாமலாக்கபட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள்.தமது தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்தது என்ன, நீதி என்ன என்றே கேட்கிறார்கள்.அது நியாயமானதே,மனித புதைகுழிகள் அகழ்வு மற்றும் அடுத்தக்கட்ட விசாரணைகளுக்கு தேவையான நிதி நீதிமன்றத்தின் உத்தரவு ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளன. உண்மை வெளிவர வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாட்டையும், அதன் ஊழியர்களின் சேவையையும் உச்ச அளவில் எதிர்பார்க்கிறோம்.நடைமுறைக்கு சாத்தியமான வகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள்.
தள்ளாடும் வயதில் உள்ள பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்காக எதிர்பார்த்துள்ளார்கள்.இதுவொரு தனித்துவமானதொரு விடயம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.காணாமல் போனோர் பற்றிய விவகாரம் உணர்வுபூர்வமானது என்பதை விளங்கிக் கொண்டு விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு.நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை.
காணாமல் போனோர் பற்றி விவகாரத்தை உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும். தேவையான வளங்களை நாங்கள் வழங்குகிறோம்.இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றார்.
Leave a comment