இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலை இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கெஹெல்பத்தார பத்மே, கொமாண்டோ சலிந்த, பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
இலங்கைப் பொலிஸார் மற்றும் சர்வதேசப் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரதான குற்றவாளியான கெஹெல்பத்தார பத்மே, மலேசியாவில் இருந்து தப்பிச் சென்று இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த 6 பேர் மீதும் கொலை, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட பல தீவிர குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களை இவர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருந்து வழிநடத்தியுள்ளனர் எனக் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவர்களில் பெண் தவிர ஏனைய ஐவரும் சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்களையும் ஓரிரு நாட்களில் இலங்கைக்குக் கொண்டு வருவதற்குரிய பேச்சு இடம்பெற்று வருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அவர்கள் இங்கு வந்த பின்னர் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
Leave a comment