வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் வீழ்ந்து மரணமடைந்திருந்தார்.
அந்த மரணத்துக்கு அந்தப் பகுதியில் பயணித்த போக்குவரத்துப் பொலிஸாரே காரணம் எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்புக் காரணமாக மரணித்தார் என்று சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களைக் கைது செய்து வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களைக் கைது செய்யுமாறும் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment