வடமராட்சி கிழக்கு மணற்காடு கிராமத்தில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி நேற்று
மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது.
நேற்று முற்பகல் 11 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள், தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கு மரக்காடு உட்பட 300. ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்ய முற்பட்டுள்ளனர்.
அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள், உடனடியாக அவ்விடத்துக்கு சென்று காணியை அளவீடு செய்யவிடாது தடுத்துள்ளனர்.
குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியிலும் செயற்பட்ட நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணற்காடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்த அவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள், தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளோம். இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் இந்தக் காணிகள் வழங்கப்பட்டன இதனை நாம் எதிர்க்கிறோம்.
ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை-என்றனர்.
Leave a comment