மட்டக்களப்பு, மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச சபை மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது. புதிய தவிசாளராக அந்தக் கட்சியைச் சேர்ந்த காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் பிரசன்னத்தில் சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது புதிய தவிசாளருக்கான முன்மொழிவை உள்ளூராட்சி ஆணையாளர் கோரினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரையம்பதி பிரதேச சபையின் உப தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டார். தவிசாளருக்கான வேறு தெரிவுகள் இன்மையால் ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளராக கா.செந்தில்குமார் ஏகமனதாகத் தெரிவு செய்ப்பட்டார்.
பிரதேச சபையின் உப தவிசாளருக்கான பதவியானது தற்போது வறிதாக்கப்பட்டுள்ளமையால், மீண்டும் குறித்த பதவிக்கான வெற்றிடம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தெரிவு செய்யப்படும் என்று கிழக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
முன்னர் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் த.மாணிக்கராஜா அண்மையில் காலமாகியதன் காரணமாக இந்தப் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய தவிசாளர் தெரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்யின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.






Leave a comment