“பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடம் இறுதிப் பகுதியில் நடத்தலாம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன?”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின்போது அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பல வருடங்களாக அரச அதிகாரிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குவது முறையற்றது. இதனால் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன்.
இந்தப் பிரேரணையை அரச பிரேரணையாக கருதி பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் இறுதிப் பகுதியில் நடத்தலாம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆகவே, மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை அரசு அறிவிக்க வேண்டும்.” – என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன,
“எந்தத் தேர்தலையும் பிற்போட வேண்டும் என்ற நோக்கம் அரசுக்குக் கிடையாது.
அரச நிர்வாகக் கட்டமைப்புக்கு அமையாகவே மாகாண சபைகள் இயங்குகின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வரை மாகாண சபைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இருக்க முடியாது. ஆகவே, தீர்வு காண நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்.” – என்றார்.
Leave a comment