“மாகாண சபை முறைமை என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். எனவே, அந்தத் தேர்தலை உடனடியாக நடத்தி மக்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பணியை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
மக்கள் பிரதிநிதிகளின் வேலையை அரச அதிகாரிகள் செய்ய முடியாது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அஞ்சியா மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு பின்வாங்குகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுகின்றோம்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கிய ஒரு வாய்ப்புதான் மாகாண சபை முறைமையாகும். எனவே, வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார்.
Leave a comment