இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவை – உதவியை ஆஸ்திரேலியாவிடம் இருந்து பெற்றுத் தருமாறு அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இதன்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அங்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வின்போதே மேற்படி இருவரும் இவ்வாறு சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலே நிலவி வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி இங்கு சுமுகமான உரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டார்.
இலங்கை ஏற்றுமதி சார்ந்த பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது கோரிக்கை விடுத்தார்.


Leave a comment