இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷாடிகா லக்ஷானி என்பவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ , ‘பாணந்துறை நிலங்க’ மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலகக் கும்பல் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி கடந்த 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலகக் கும்பல் கடந்த மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment