“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைப்பாடு இல்லை.” – என்று கொழும்பு மறை மாவட்டத்துக்கான தகவல் தொடர் இயக்குநர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது, “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட வேண்டும். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால்கூட பரவாயில்லை” – எனக் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இக்கூற்று அருட்தந்தை ஜூட்டின் தனிப்பட்ட கருத்தாகும் சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையும்,உலகளாவிய திருச்சபையும் மரணதண்டனையை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நிலந்த ஜயவர்தன தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சி.ஐ.டியின் இயக்குநராக ஷானி அபயசேகரவையும்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனிவிரட்னவையும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பேராயர் கோரிக்கை விடுத்தார் என வெளியாகும் தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
Leave a comment