வங்குரோத்து அடைந்த நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்வதற்கான
மூலோபாயத் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர மேற்கண்டவாறு கூறினார்.
கடன் மறுசீரமைப்புக்கான ஆறாவது தவணைக் கடன் வழங்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது மதிப்பாய்வின் மத்திய கட்டத்துக்காகவே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
‘பொருளாதார ரீதியாக வங்குரோத்தான நிலையிலிருந்து நாட்டை மீட்டு, அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்.
இதற்கான ஒரு மூலோபாய வேலைத் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது. ‘பொருளாதார மீட்சியை அடைய வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலக்குகளைக்கூட கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருப்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.
இதற்காக முறையான வேலைத்திட்டம் இருக்கிறது.
பொருளாதார புத்துயிர்ப்பை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் ஈர்க்க வேண்டும். அதற்காக நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க
வேண்டும் – என்றும் ஜனாதிபதி கூறினார்.
நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருதரப்புகளும் கலந்துரையாடின என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் சார்பில், தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன
சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியம் சார்பில் அதன் தூதுக்குழுத் தலைவர் எவன் பாபஜோர்ஜியூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a comment