தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது விடயத்தில் என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று
எதிர்பார்க்கிறேன் – இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தமிழ் அரசுக் கட்சியின் சிறீதரன் எம்.பி நிலையியல் கட்டளை சட்டத்தின் பிரகாரம் முன்வைத்த கேள்விக்கு நேற்று வியாழக்கிழமை பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
04 சந்தேகநபர்கள், 08 தண்டனை பெற்ற கைதிகள் இதில் அடங்குவர்.
மேலும், ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் இவர்களில் இருவர் மேன்முறையீடு செய்துள்ளனர். மரண தண்டனை கைதிகள் 2 பேர் வெலிக்கடை, மகசின்,
மஹர, தும்பர, பூஸா, நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால்
தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனை காலம் நிறைவடைந்த
பின்னர் விடுதலையாவார்கள்.
அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணையளிக்கப்படும் பட்சத்தில் விடுவிக்கப்படுவார்கள்
அல்லது மேன்முறையீடு செய்து பிணை பெற்றுக்கொள்ளலாம். சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பு தொடர்பில்
கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் என்னை சிலர் சந்தித்தனர். இந்த விடயத்தில் எனக்கு எந்தவித உத்தரவாதமும் வழங்க முடியாது.
ஏனெனில், அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும்.
சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் – என்றார்.
Leave a comment