இந்த அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவற்றதாக்குவதற்கு முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் உள்ள தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விவரங்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 2008 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஆட்சியில் இருந்த அரசின் போது ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விவரங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டன.
2004 முதல் 2008 வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசின் நிர்வாகத்தின் கீழ் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விவரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை. 2004 – 2008 ஆம் ஆண்டு அரசுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் 39 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினார்கள். இவர்களும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளார்கள். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 2004 – 2008 வருட காலத்தின் விவரங்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறாயின் இதில் ஏதேனும் முறைகேடு இடம்பெற்றுள்ளது என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
2004 – 2008 வரையான காலப் பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டவர்களின் விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்குக் கடந்த 5 மாதங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். ஆனால், இதுவரையில் எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை.
சுயாதீன தகவல் அறியும் ஆணைக்குழுவை மரணப் படுக்கைக்குக் கொண்டு செல்லவே அரசு முயற்சிக்கின்றது. தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் பதவி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெற்றிடமாகியுள்ளது. அத்துடன் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையிலும் உறுப்பினர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இந்த அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவற்றதாக்குவதற்கு முயற்சிக்கின்றது. சுயாதீன தகவல் அறியும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மலினப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அரச நிறுவனங்களில் தகவல் கோரப்படும் பட்சத்தில் அவை மறுக்கப்படுகின்றன.” – என்றார்.
Leave a comment